மத்திய மாகாணசபைத் தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்குறணையில் பல சவால்களை எதிர் கொண்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வபாத்தான அக்குறணை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் கங்கா முஹ்சீனின் வெற்றிடம் இது வரை நிரப்பப்படாமை அக்குறணை மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முன்வந்த போது நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பும் (பீ.எம்.ஜே.டி) களமிறங்கியமை அக்கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பினை அழைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றிலும் கையொப்பமிட்டது.
இரு தரப்பினரும் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டது. தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 3 ஆசனங்கள் கிடைத்தன. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த கங்கா முஹ்சீன் முதலாவதாகத் தெரிவானார். ஏனைய இருவரும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பிலிருந்து தெரிவானார்கள். தேர்தலில் நான்காம் இடத்தையும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பினரே கைப்பற்றினர். தேர்தல் முடிவுகளின் படி குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த இர்பான் காதர் நான்காம் இடத்தினைப் பெற்றார்.
அக்குறணை பிரதேச சபையின் உறுப்பினர் கங்கா முஹ்சீனின் மறைவுக்கு முன்பு அக்குறணை பிரதேச சபையில் கங்கா முஹ்சீனையும் உள்ளடக்கி மொத்தம் 7 முஸ்லிம் உறுப்பினர்களும் 7 பெரும்பான்மை உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். ஆனால் கங்கா முஹ்சீனின் மறைவுக்குப் பின்பு முஸ்லிம் காங்கிரஸினால் உறுப்பினர் ஒருவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு வெற்றிடம் நிரப்பப்படாமையினால் தற்போது 6 முஸ்லிம் உறுப்பினர்களும் 7 பெரும்பான்மை சமூக உறுப்பினர்களும் அக்குறணை பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
எனவே இன்றைய சூழ்நிலையில் அக்குறணை பிரதேச சபையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஏதாவது தீர்மானங்கள் முன்மொழியப்பட்டால் அதனை பிரதேச சபைத் தலைவரால் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.இதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பீடம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கங்கா முஹ்சீனின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள அங்கத்துவம் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்புக்கே வழங்கப்படவேண்டும். விருப்பு வாக்குகளின் அடிப்படையிலும் எற்கனவே முஸ்லிம் காங்கிரஸும் குறிப்பிட்ட அமைப்பும் அக்குறணையைச் சேர்ந்த முன்னணி உலமாக்கள் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலும் இந்நியமனத்தை நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்புக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான அமைப்புடன் கண்டியில் பேச்சுவார்த்தையொன்றினை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது அக்குறணை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு தற்போது ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமையினால் குறித்த பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுத் தருமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்குமிடையில் காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் குறித்த பிரதிநிதித்துவம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தமக்கே வழங்கப்பட வேண்டுமென நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு உறுதியாக இருந்தது. இதேவேளை அமைப்பினால் மாற்றுக் கருத்தொன்றும் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
அக்குறணை மகளிர் வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் ஹக்கீம் புதிய கட்டிடமொன்றினைப் பெற்றுத் தந்தால் அக்குறணை பிரதேச சபையில் நிலவும் வெற்றிடத்தை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பதாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை தெரிவித்தது. சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஹக்கீம் அக்குறணை மகளிர் வித்தியாலயத்திற்கு நேரில் விஜயம் செய்து இடப்பற்றாக்குறையை கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இரு தரப்பும் உலமாக்களின் முன்னிலையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி அக்குறணைக்கு சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான வேலைத் திட்டங்களை வழங்குவதாகவும் இணக்கம் காணப்பட்டது. எனினும் இந்த உடன்படிக்கை இதுவரை அமுல் செய்யப்பட வில்லை என நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் பிரதிநிதியொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
தற்போது மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தேர்தலில் போட்டியிடும் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
அக்குறணை பிரதேச சபையில் வெற்றிடமாக உள்ள பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு வழங்கப்போகிறது? என்று அக்குறணை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அக்கட்சி தான் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பையும் புறக்கணித்தால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குவங்கியில் நிச்சயம் சரிவுகள் ஏற்படும்.
இதேவேளை அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மசூத் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்த கருத்தினை நோக்குகையில் குறிப்பிட்ட அமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் வெற்றிடமாகவுள்ள அங்கத்தவர் நியமன விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அநீதியாக நடந்து கொள்ளாது என கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் கருத்து தெரிவிக்கையில்;-
கட்சியின் தலைமைப்பீடம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்பு மனுத்தாக்கலிலும் மும்முரமாக ஈடுபட்டதினால் அக்குறணை பிரதேச சபையின் பிரச்சினையை தீர்வு காணுவதில் தாமதமேற்பட்டிருக்கலாம். அக்குறணை பிரதேச சபை வெற்றிடத்துக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்படும் என்றார்.
இது சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.நயீமுல்லாஹ் கருத்து தெரிவிக்கையில்;-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக புதிய சட்ட மூலமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாகவே அக்குறணை பிரதேச சபையில் வெற்றிடமாகவுள்ள பிரதிநிதித்துவத்துக்கு ஒருவரை நியமிப்பதில் கால தாமதமேற்பட்டுள்ளது.
நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் இயக்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அக்குறணை பிரதேச சபையில் தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டு பட்டியலில் அடுத்ததாக இருக்கும் வேட்பாளர் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பினராக இருந்தால் தவிசாளர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்குரியதாகும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால் உறுப்பினர் ஒருவரை எனக் குறிப்பிடப்பட்டில்லை.
நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு கடந்த அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மரச்சின்னத்தில் போட்டியிட்டதனாலேயே அவர்களால் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதேச சபை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டு அக்குறணை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடம் முஸ்லிம் காங்கிரஸுக்கே உரியது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அக்குறணை மகளிர் வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் தாம் உறுப்பினர் பதவியை விட்டுத் தருவதாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு பேரம் பேசுவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை. ஏனென்றால் ஒரு பாடசாலை அபிவிருத்தியை குறுகிய காலத்தில் ஓரிரு மாதங்களில் மேற்கொள்ள முடியாது. அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனையோ நடைமுறைகளை செயற்படுத்த வேண்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் வெற்றிடமாகவுள்ள பிரதேச சபை உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு பெயரைக் குறிப்பிடும் படி கட்சியின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறவிப்பார். அறிவித்தல் கிடைத்ததும் கட்சி ஒருவரை நியமிக்கும். அவ்வாறு கட்சி ஒருவரின் பெயரை குறிப்பிடாவிட்டால் பட்டியலில் அடுத்து இருப்பவர் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்படுவார் என்றார்.
அக்குறணை பிரதேச சபைக்கு உறுப்பினர் நியமன விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இவ்விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
(A.R.A.Fareel)
0 comments:
Post a Comment