வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று
மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. 10
மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில்
இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு
நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில்
மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43
இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785
வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
குறிப்பாக வட மாகாணசபைக்கு 36
உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் சுயேச்சைக் குழுக்கள் மற்றும்
அரசியல் கட்சிகள் சார்பில் 906 வேட்பாளர்கள் ஐந்து மாவட்டங்களிலும்
களத்தில் குதித்துள்ளனர். நாட்டில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட
பின்னர் வட மாகாண சபைக்கு முதல் தடவையாக தேர்தல் நடைபெறுகின்றமை விசேட
அம்சமாகும்.
இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக சுமார் 40 ஆயிரம் அரச
ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment